ஹிஜாப் விவகாரம்: மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு


ஹிஜாப் விவகாரம்: மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 22 Sep 2022 9:15 AM GMT (Updated: 22 Sep 2022 11:32 AM GMT)

ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை 9 முறை விசாரணை நடந்துள்ளது.

புதுடெல்லி,

கர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் வகுப்பறைக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கர்நாடக அரசு தடை விதித்து உள்ளது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான இறுதி விசாரணையின் போது அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு கூறியது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுகன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று 10-வது நாளாக மனு மீதான விசாரணை நடந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதி துலியா மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நடராஜிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். "சீருடை சட்டத்தின் அடிப்படையில் சம பாதுகாப்பு அளிக்கிறது என்கிறீர்களா? சட்டத்தின்படி சம பாதுகாப்பு வழங்குவதற்கு வேறு அர்த்தம் உள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்லபோனால், தேசிய ஒருமைபாட்டை காரணமாக சொல்லி நீங்கள் அவர்களை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுக்கிறீர்களா? என்று கேட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹிஜாப் விவகாரம் தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story