இமாசலபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தனியார் காரில் எடுத்து செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு


இமாசலபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தனியார் காரில்  எடுத்து செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

விதிமுறைகளை மீறி தனியாருக்கு சொந்தமான வாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.அங்கு 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் வரை அரசு வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.

இந்நிலையில், விதிமுறைகளை மீறி தனியாருக்கு சொந்தமான ஒரு வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

66-ராம்பூர் (எஸ்சி) சட்டமன்றத் தொகுதியில் உள்ள துத்நகர் 49க்கு வாக்குச்சாவடியில் நேற்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அதன் பின், ஒரு தனியார் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன.

அதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தோம் என்று காங்கிரஸ் எம்எல்ஏ நந்த் லால் கூறினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றினர். காங்கிரஸ் மற்றும் பாஜக முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் சோதனை செய்து, அதில் முறைகேடு செய்யவில்லை என்பதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்ல வாக்குச்சாவடியில் இருந்த அலுவலர்கள் அவசரம் காட்டினர். இதன் காரணமாகவே தனியார் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்றனர்' என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால், தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது. மேலும், ஆறு வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story