கவுரவ கொலை: மகள் -காதலனை கொலை செய்து முதலைகள் நிரம்பிய ஆற்றில் வீசிய தந்தை


கவுரவ கொலை: மகள் -காதலனை கொலை செய்து முதலைகள் நிரம்பிய ஆற்றில் வீசிய தந்தை
x

18 வயது மகள் மற்றும் 21 வயது காதலனை குடும்பத்தினர் சுட்டுக் கொன்று கயிற்றில் கட்டி முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசியுள்ளனர்.

போபால்

மத்திய பிரதேசம் மொரேனாவில் ரத்தன்பாசி கிராமத்தை சேர்ந்தவர் ஷிவானி தோமர் ( வயது 18 ) இவர் அருகிலுள்ள பலுபு கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் தோமர் ( வயது 21) என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஷிவானி தங்கள் காதலை தொடர்ந்தனர். இந்த நிலையில் ராதிஷ்யம் ஜூன் 3ஆம் தேதி காணாமல் போனார். அதே நாளில், ஷிவானியையும் காணவில்லை.எதிர்ப்புக்கு பயந்து இருவரும் ஓடிவிட்டதாக அந்த இளைஞனின் குடும்பத்தினர் நம்பினர். இது குறித்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஷிவானியின் தந்தையிடம் விசாரணை நடத்தியபோது மகளையும் காதலனையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

ஜூன் 3-ம் தேதி இருவரையும் சுட்டுக் கொன்ற பிறகு, அவர்களின் உடலில் பெரிய கற்களைக் கட்டி, முதலைகள் நிறைந்த சம்பல் ஆற்றில் வீசியதாக ஷிவானியின் தந்தை கூறி உள்ளார்

சம்பல் ஆற்றில் 2000க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மகள் மற்றும் காதலனின் உடல் வீசப்பட்ட இடத்தை குடும்பத்தினர் போலீசாரிடம் காட்டி உள்ளனர். போலீசார் உடல்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story