ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 9 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!


ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 9 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
x

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 9 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

ஹோஷியார்பூர்,

பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த ரித்திக் என்ற 6 வயது சிறுவன், நாய்கள் துரத்தியதால் பயந்து ஓடியதில் சணல் பையால் மூடியிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.

சுமார் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 100 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்றன. 9 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டான். ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கும் போது மயக்கத்தில் இருந்த சிறுவன் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

இந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர், 'ஹோஷியார்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ரித்திக் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். சிறுவனின் குடும்பத்திற்கு கடவுள் வலிமை தர வேண்டும். குடும்பத்தின் இழப்பை ஈடு செய்ய முடியாது. இந்த துயர நேரத்தில் அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story