குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடித்து தின்ற கணவன்


குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடித்து தின்ற கணவன்
x

குடும்பத் தகராறில் மனைவியின் கை விரலை கணவர் கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு

பெங்களூருவில் குடும்பத் தகராறில் பெண்ணின் கை விரலை கணவன் கடித்து தின்ற கொடூரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெங்களூரு கோனனகுண்டே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). இவரது மனைவி புஷ்பா (40). இந்த தம்பதிக்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் 2-வது பிள்ளை பிறந்த சில ஆண்டிலேயே கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த புஷ்பா, விஜயகுமாரை விட்டு பிரிந்து, 2 மகன்களுடன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி விஜயகுமார், புஷ்பாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த விஜயகுமார், மனைவியின் இடது கை விரலை வாயால் கடித்துள்ளார். பின்னர் அவரது விரலை வாயில் போட்டு மென்று தின்றுவிட்டதாக தெரிகிறது.

இதனால் புஷ்பா வலியால் அலறி துடித்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்ததும், விஜயகுமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து புஷ்பா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், புஷ்பா சம்பவம் பற்றி கோனனகுண்டே போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 28-ந்தேதி எனது வீட்டுக்கு வந்த விஜயகுமார் தகராறு செய்து, எனது இடது கை விரலை கடித்து தின்றுவிட்டார். அத்துடன் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீசார், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story