சாய்பாபாவிடம் மனமுருகி கேட்டேன்; பிரசாதம் கிடைத்தது - சாய் பாபாவை சிலாகித்த பீகார் மந்திரி


சாய்பாபாவிடம் மனமுருகி கேட்டேன்; பிரசாதம் கிடைத்தது - சாய் பாபாவை சிலாகித்த பீகார் மந்திரி
x

சாய் பாபாவின் தொடரைப் பார்த்து மனம் உருகி வேண்டிய தமக்கு பிரசாதம் கிடைத்திருப்பதாக பீகார் மந்திரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா,

சாய் பாபாவின் தொடரைப் பார்த்து மனம் உருகி வேண்டிய தமக்கு பிரசாதம் கிடைத்திருப்பதாக பீகார் மந்திரி தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜ் பிரதாப் யாதவ் அம்மாநில சுற்றுச் சூழல் மந்திரியாக உள்ளார். தனக்கு ஏற்பட்ட தெய்வீக அனுபவம் குறித்து பேசியுள்ள அவர், தனது ஒட்டுமொத்த வாழ்விலும் இப்படி ஒரு மேஜிக்கை தான் இதுவரை பார்த்ததில்லை என்று சிலாகித்துள்ளார்.

நேற்று முன் தினம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாய்பாபா தொடரில், சாய்பாபா தனது பக்தர்களுக்கு விபூதி வழங்கி அவர்களின் நோயை குணப்படுத்தியதாகவும், இது போன்ற அற்புதம் தன்னுடைய வாழ்க்கையிலும் நடைபெறுமா என சோதிக்க விரும்பியதால், "உங்கள் பிரசாதத்தை கொடுங்கள்" என சாய்பாபாவிடம் மனமுருகி வேண்டியதாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று தன் அலுவலகத்திற்கு சென்ற போது, அலுவலக மேஜையில் சாய்பாபாவின் விபூதி அடங்கிய 2 பிரசாத பாக்கெட்கள் இருந்தததை பார்த்து ஆச்சரியமடைந்ததாக தெரிவித்த அவர், அந்த பிரசாதத்தை தனது மனத்திற்கு நெருக்கமாக வைத்துக் கொள்வேன் என்றும் குறிப்பிட்டார்.


Next Story