ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் எனக்கு தாலி கட்டினார் : சுவப்னா சுரேஷ் பரபரப்பு தகவல்


ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் எனக்கு தாலி கட்டினார் : சுவப்னா சுரேஷ் பரபரப்பு தகவல்
x

கோப்புப்படம்

சென்னையில் உள்ள ஒரு கோவிலில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் தனக்கு தாலி கட்டியதாக சுவப்னா சுரேஷ் தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் 2-வது திருமணம் செய்து கொண்டார் என்று தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுவப்னா சுரேஷ் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்கம் கடத்தல் வழக்கு

கடந்த 2020-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்டவர் சுவப்னா சுரேஷ். இந்த வழக்கில் முன்னாள் மந்திரி உள்பட பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சுங்க இலாகா, என்.ஐ.ஏ. மத்திய அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தனித்தனியே விசாரணை நடத்தியது. இந்த விவகாரம் கடந்த சில மாதமாக ஓய்ந்திருந்த நிலையில், தற்போது சுவப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை புத்தகம் கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய பிரமுகர்கள்

'சதியின் பத்ம வியூகம்' என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர், முன்னாள் மந்திரி ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பல்வேறு குச்சாட்டுகள் இடம் பெற்று உள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் விவரம் வருமாறு:-

கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் அரசு வர வேண்டும் என்பதற்காகத்தான் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அரசுக்கோ, அரசு சார்ந்தவர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று சிறையில் இருந்தபடி வெளியிட்ட ஆடியோவில் தெரிவித்திருந்தேன். ஆட்சி மாறினால் வழக்கு விசாரணையின் போக்குமாறும் என்றும், என்னை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், மீண்டும் இடது முன்னணி ஆட்சிக்கு வந்தால் தான் வழக்கில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறி என்னை நம்ப வைத்து ஆடியோவை பதிவு செய்தார்கள்.

2-வது திருமணம்

முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவசங்கர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டி 2-வது திருமணம் செய்து கொண்டார். அப்போது ஒருபோதும் உன்னை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

பின்னர் 2 பேரும் கைதான பிறகு முதன் முதலாக என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சிவசங்கரை பார்த்தபோது எனது கழுத்தில் அவர் கட்டிய தாலி இருந்தது.

நான் யாருக்கு எதிராகவும் பாலியல் புகார் கூற விரும்பவில்லை. ஆனால் முன்னாள் மந்திரியும், கேரள சட்டசபையில் முக்கிய நபருமாக இருந்த ஒருவர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு வருமாறு பலமுறை அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. இது தொடர்பாக அவர் எனக்கு பலமுறை அனுப்பிய வாட்ஸ் ஆப் தகவல்கள் இப்போதும் என்னிடம் பத்திரமாக உள்ளன. அதை நான் விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கனவே கொடுத்துவிட்டேன்.

இது போன்ற பல பரபரப்பு தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. இது கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story