பாதாள சாக்கடை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை; பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி


பாதாள சாக்கடை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை;  பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
x

பாதாள சாக்கடை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று எலகங்கா மண்டல அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எலகங்காவில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். காபி டே லே-அவுட்டில் கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று மக்கள் புகார் கூறினர். அதை சரிசெய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். மழைநீர் கால்வாயில் தொடர்ந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கால்வாய்களில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன்.

இங்குள்ள 60 அடி சாலையில் 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்படும். பெங்களூருவில் பாதாள சாக்கடைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. தொட்டபெட்டஹள்ளியில் உடனடியாக நம்ம கிளினிக் தொடங்கப்படும்.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.


Next Story