ஆந்திராவில் தமிழக மாணவர்களை விரட்டி விரட்டி அடித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் - அதிர்ச்சி சம்பவம்


ஆந்திராவில் தமிழக மாணவர்களை விரட்டி விரட்டி அடித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் - அதிர்ச்சி சம்பவம்
x

ஆந்திராவில் தமிழக மாணவர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் இரும்புக் கட்டையால் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி,

ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளது. இந்த சட்டக் கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து வந்து படித்து செல்வது வழக்கம்.

அவ்வாறு கடந்த சில தினங்களாக சட்ட கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகளை முடித்துக் கொண்டு தமிழக மாணவர்கள் மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பி கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் எஸ்.ஆர் புரம் வடமாலா பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்ற பொழுது பாஸ்ட்டாக் வேலை செய்யவில்லை எனவே பணத்தை செலுத்தி முன்னாள் செல்லவும் என சுங்கசாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.

அப்போது, பாஸ்ட்டாக்கில் பணம் உள்ளது எனவே ஸ்கேன் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளும்படி மாணவர்கள் கூறியுள்ளனர். ஆனால் பாஸ்ட் ட்ராக் காலக்கெடு முடிந்த நிலையில் பணத்தைக் கட்டிவிட்டு செல்லுங்கள் என சுங்கச்சாவடி ஊழியர் கூறி, ஹெல்மெட்டால் தாக்கி வாகனத்தை பின்னால் எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் முதலில் எங்களுக்கு தீர்வு கண்டுவிட்டு பின்னர் மற்றவர்களை அனுமதிக்கப்படும் என கூறினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சுங்க சாவடி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழக சட்டக் கல்லூரி மாணவர்களை தாக்கினர்.

இதனால் சுங்குச் சாவடிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உள்ளூர் பொதுமக்களும் சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக திரண்டு தமிழகத்திலிருந்து வந்து எங்களிடம் பிரச்சனை செய்கிறீர்களா என கூறி சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு கார் கண்ணாடிகளை உடைத்தனர். இதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.

இதனால் கலவரம் போல சுங்க சாவடி முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்பதி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டருக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வடமாலா பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.




Next Story