பெங்களூருவில், ஏரியில் பரிசல் கவிழ்ந்தது: பள்ளி வேன் டிரைவர்கள் 2 பேர் சாவு


பெங்களூருவில், ஏரியில் பரிசல் கவிழ்ந்தது:  பள்ளி வேன் டிரைவர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 19 Sep 2022 6:45 PM GMT (Updated: 19 Sep 2022 6:45 PM GMT)

பெங்களூருவில் ஏரியில் பரிசல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பள்ளி வேன் டிரைவர் உள்பட 2 பேர் இறந்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு தலகட்டபுரா அருகே கெம்மிகேபுரா பகுதியில் ஏரி உள்ளது. இந்த நிலையில் ஜெயநகரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவர்களாக பணியாற்றும் 6 பேர் ஏரிக்கு சென்றனர். ஏரிக்கரையில் அமர்ந்து 6 பேரும் மதுகுடித்தனர். பின்னர் ஏரியின் கரையோரம் நின்ற பரிசலில் ஏறி 3 பேர் ஏரிக்குள் சென்றனர். ஏரியின் நடுப்பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக பரிசலில் ஏரியில் கவிழ்ந்தது.

இதனால் பரிசலில் இருந்து 3 பேரும் ஏரிக்குள் விழுந்தனர். அதில் சிரஞ்சீவி என்பவர் நீச்சல் அடித்து கரைக்கு திரும்பினார். ஆனால் கொல்லஹள்ளியை சேர்ந்த சங்கர்(வயது 35), கெம்மிகேபுராவில் வசித்து வந்த சிவா(25) ஆகிய 2 பேரும் ஏரியில் மூழ்கி இறந்தனர். அவர்கள் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story