பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பூரி இலவசம்! பிரதமரிடம் பாராட்டு பெற்ற சாலையோர வியாபாரியின் செயல்


பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பூரி இலவசம்! பிரதமரிடம் பாராட்டு பெற்ற சாலையோர வியாபாரியின் செயல்
x

யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஆதாரத்தை காண்பிக்கின்றனரோ இலவசமாக உணவு வழங்கப்படும் .

சண்டிகர்,

தலைநகர் டெல்லிக்கு பக்கத்தில் அமைந்துள்ள பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகராக விளங்கும் சண்டிகரை சேர்ந்த ராணா என்பவர் ஒரு உணவு கடையை நடத்தி வருகிறார்.

தினமும் தனது சைக்கிளில் உணவை விற்று வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 15 வருடமாக அவர் சைக்கிளிலேயே இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், அவருடைய மகள் ரிதிமா அவருக்கு ஒரு யோசனையை கூறியுள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டபோது தடுப்பூசி செலுத்த அரசு முடிவு எடுத்தது.

ஆனால் பலர் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டிய நிலையில், யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான ஆதாரத்தை கொடுக்கின்றனரோ அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதனை அடுத்து பலர் ஆர்வமுடன் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வந்தனர். அவர்களுக்கு தான் விற்று வரும் உணவான பூரி மசாலை இலவசமாக வழங்கி வந்தார்.

இதனை பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் வானொலி வாயிலாக மக்களுடன் உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சியில், குறிப்பிட்டு பாராட்டினார்.

இந்த நிலையில் இப்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. ஆனால் அதனை மக்கள் பெரிதளவில் ஆர்வத்துடன் வந்து போட்டுக் கொள்ளவில்லை.

இப்போது மீண்டும் தனது பழைய யோசனையை செயல்படுத்தி தொடங்கி உள்ளார் ராணா. அதன்படி யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான ஆதாரத்தை காண்பிக்கின்றனரோ அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவருடைய இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவர் கடந்த ஆண்டு, மே மாதம் தொடங்கி கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் வரை இலவசமாக உணவை வழங்கி வந்துள்ளார். அதேபோல இப்போதும் சில வாரங்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார்.

கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் உணவை விற்று வரும் அவரது இந்த செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அவரது சொந்த ஊர் இமாச்சலப் பிரதேசம் ஆகும். ஆனால் அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் சண்டிகர் நகரில் வசித்து வருகிறார்.

பிரதமர் மோடி தன்னை குறிப்பிட்டு மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டியது தனக்கு பெருமையான விஷயமாக அமைந்தது என்று கூறினார். பத்தாம் வகுப்பு வரை மட்டும் கல்வி பயின்றுள்ள அவர், அவருடைய தந்தை மறைந்த காரணத்தினால் அவருடைய இரு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் ஆகியோர் அடங்கிய தனது ஏழை குடும்பத்தை காப்பாற்ற வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளார்.

இப்போது நாடு முழுவதும் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், 68 கோடிக்கும் மேற்பட்டோர் போஸ்டர் செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். ஆனால் இதுவரை ஏறத்தாழ 7 கோடி பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story