சித்ரதுர்காவில் விவசாயி அடித்து கொலை; முதியவர் கைது


சித்ரதுர்காவில்  விவசாயி அடித்து கொலை; முதியவர் கைது
x
தினத்தந்தி 14 July 2023 6:45 PM GMT (Updated: 14 July 2023 6:45 PM GMT)

சித்ரதுர்காவில் விவசாயி அடித்து கொலை செய்த வழக்கில் முதியவர் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு-

சித்ரதுர்காவில் விவசாயி யை அடித்து கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

பணம் கொடுக்கல் வாங்கல்

சித்ரதுர்கா மாவட்டம் ஓசதுர்கா தாலுகா பெலகூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்தராமப்பா (வயது55). அதே பகுதியை சேர்ந்தவர் திருமப்பா (60). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்தனர். இந்தநிலையில், சித்தராமப்பா, திருமப்பாவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் சித்தராமப்பா அப்பகுதியில் உள்ள மதுபானக்கடைக்கு மதுகுடிக்க சென்றார். அப்போது அங்கு திருமப்பாவும் மதுகுடிக்க வந்தார். அங்கு அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் திருமப்பா சித்தராமப்பாவை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

விவசாயி சாவு

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சித்தராமப்பா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீராபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சித்தராமப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஸ்ரீராமபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் தப்பியோடிய திருமப்பாவையும் தேடி வந்தனர். இந்தநிலையில் பெலகூர் பகுதியில் பதுங்கி இருந்த திருமப்பாவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story