ஹாசனில் தாய், தந்தைக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற கொடூர வாலிபர் கைது


ஹாசனில்  தாய், தந்தைக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற கொடூர வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2023 6:45 PM GMT (Updated: 28 Aug 2023 6:45 PM GMT)

ஹாசனில் கள்ளக்காதலை கண்டித்ததால் தாய், தந்தைக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

ஹாசன்-

ஹாசனில் கள்ளக்காதலை கண்டித்ததால் தாய், தந்தைக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தம்பதிக்கு வாந்தி, மயக்கம்

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா பிசிலஹள்ளியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பா (வயது55). இவரது மனைவி உமா (48). இத்தம்பதியின் 2-வது மகன் மஞ்சுநாத் (27). கூலி வேலை பார்த்து வருகிறார். குடி பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மேலும் தாயிடம் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி காலை நஞ்சுண்டப்பா மற்றும் அவரது மனைவி உமாவிற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தம்பதியை மீட்டு அரக்கல்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தம்பதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஷத்தன்மையுடைய உணவு சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறினர். இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

உணவில் விஷம்

கடந்த 22-ந் தேதி தம்பதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினர். இந்தநிலையில் மறுநாள் 2 பேரும் உயிரிழந்தனர். உறவினர்கள் அனைவரும் சிகிச்சை பலனின்றி இறந்ததாக நினைத்தனர். இதையடுத்து இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். இந்தநிலையில் நஞ்சுண்டப்பாவின் இளையமகனுக்கு பெற்றோரின் சாவில் சந்தேகம் எழுந்தது. அவர் உடனே அரக்கல்கோடு போலீசில் பெற்றோர் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு மஞ்சுநாத் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் தம்பதி விஷம் கலந்த உணவு சாப்பிட்டு இறந்ததாக தெரியவந்தது. இதையடுத்து மகன் மஞ்சுநாத்தை போலீசார் கைது ெசய்து விசாரித்தனர்.

கள்ளக்காதலை கண்டித்தால் கொலை

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது மஞ்சுநாத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை பெற்றோர் கண்டித்தனர். மேலும் குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி பெற்றோரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய் பெயரில் வாங்கிய கூட்டுறவு வங்கி கடன் பணத்தை எடுத்து சென்று கள்ளக்காதலிக்கு செலவு ெசய்துள்ளார்.

இதனால் பெற்றோர் மஞ்சுநாத்தை அழைத்து எச்சரித்தனர். இது மஞ்சுநாத்திற்கு பிடிக்கவில்லை. பெற்றோரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக சம்பவத்தன்று பெற்றோர் சாப்பிட்ட உணவில் விஷத்தை கலந்துள்ளார். அந்த உணவை தம்பதி சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மஞ்சுநாத் மீது கொலை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story