அமித்ஷா பிரித்தாளும் அரசியல் செய்கிறார் - சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு


அமித்ஷா பிரித்தாளும் அரசியல் செய்கிறார் - சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு
x

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரித்தாளும் அரசியல் செய்வதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐதராபாத்,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரித்தாளும் அரசியல் செய்வதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

தெலுங்கானாவில் இன்றைய தினத்தை சந்திரசேகர ராவ் தலைமையிலான மாநில அரசு 'தெலுங்கானா தேசிய ஒருமைப்பாட்டு தினமாக' கொண்டாடுகிறது. அதே வேளையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு "கொடூரமான நிஜாமிடம் இருந்து" விடுதலை பெற்ற நாள் என்று அழைக்கிறது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அரசு ஏற்பாடு செய்திருந்த பொது விழா ஒன்றில் பேசிய முதல் மந்திரி சந்திரசேகர ராவ் கூறியதாவது:-

பழங்குடியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டிற்காக முன்மொழியப்பட்ட சட்டம் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. பிரித்தாளும் அரசியல் செய்யும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் நான் கேட்கிறேன்; இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளியுங்கள்.

இந்தியாவின் ஜனாதிபதி கூட ஒரு பழங்குடியினப் பெண்தான். அவர் இந்த நடவடிக்கையை நிறுத்தமாட்டார். அடுத்த வாரம் இந்த இடஒதுக்கீட்டுக்கான அரசாணையை என்னுடைய அரசு வெளியிடும். பிரதமர் நரேந்திர மோடி அதை ஏற்றுக்கொள்வாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், மராட்டிய மக்கள் தன்னிடம் வந்து தேசிய கட்சி தொடங்கும்படி கூறியதாக தெரிவித்தார். தேசிய அரசியலுக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசினார்.


Next Story