கர்நாடகத்தில் வருகிற 30-ந் தேதி வரை சார் பதிவாளர் அலுவலகங்கள் இரவு 8 மணி வரை செயல்படும்


கர்நாடகத்தில் வருகிற 30-ந் தேதி வரை சார் பதிவாளர் அலுவலகங்கள் இரவு 8 மணி வரை செயல்படும்
x

கர்நாடகத்தில் 1-ந் தேதி முதல் நில வழிகாட்டி மதிப்பு உயர்வால், வருகிற 30-ந் தேதி வரை சார் பதிவாளர் அலுவலகங்கள் இரவு 8 மணிவரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

நில வழிகாட்டி வரி உயர்வு

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் உள்பட 5 இலவச திட்டங்களை அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு நில வழிகாட்டி மதிப்பை அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல் உயர்த்தி உள்ளது. இந்த நில வழிகாட்டி மதிப்பு உயர்வு காரணமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் புதிதாக நிலம், வீட்டுமனைகள் உள்ளிட்ட சொத்துகளை வாங்கி, சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இதன் காரணமாக சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு மக்கள் அதிகமாக வருவதால் இணையதள பிரச்சினையும் ஏற்படுகிறது.

இரவு 8 மணிவரை திறந்திருக்கும்

இதனை கருத்தில் கொண்டு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக இன்று 4-வது சனிக்கிழமை அரசு விடுமுறையாக இருந்தாலும், சார் பதிவாளர் அலுவலகங்கள் திறந்திருக்கும் என்றும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எப்போதும் போல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் வருவாய்த்துறை அறிவித்துள்ளது. வருகிற 1-ந் தேதி முதல் நில வழிகாட்டி மதிப்பு உயர்வதாலும், இணையதள பிரச்சினை ஏற்பட்டு வருவதாலும், மக்கள் வாங்கும் சொத்துகளை பதிவு செய்வதற்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story