மங்களூருவில் 13 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபர் கைது


மங்களூருவில்  13 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 July 2023 6:45 PM GMT (Updated: 30 July 2023 6:46 PM GMT)

மங்களூருவில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

மங்களூருவில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

13 வயது சிறுமி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்தநிலையில், மாணவி பள்ளிக்கு நடந்து செல்லும்போது அதேப்பகுதியை சேர்ந்த முகமது ஷபி (வயது35) என்பவர் பேசி வந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த முகமது ஷபி, சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றார்.

பின்னர் அங்கு வைத்து சிறுமியை முகமது ஷபி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சிறுமியை, அவர் மிரட்டி உள்ளார். இந்தநிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை முகமது ஷபி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

வாலிபர் கைது

இதையடுத்து, சிறுமியை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் கேட்டனர். அவள் முகமது ஷபி தான் பலாத்காரம் செய்தார் என கூறினாள்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பாண்டேஷ்வர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது ஷபியை தேடி வந்தனர். இந்தநிலையில், உல்லால் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது ஷபியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story