இன்கோவேக்; பயன்பாட்டுக்கு வந்த உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து


இன்கோவேக்; பயன்பாட்டுக்கு வந்த உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து
x

உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது என பாரத் பயோடெக் அறிவித்து உள்ளது.



புதுடெல்லி,


இந்தியாவில் 3 ஆண்டுகளுக்கும் கூடுதலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசியானது முதல் மற்றும் 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசியாக எடுத்து கொள்ள வலியுறுத்தப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் மக்களுக்கு அதிகரிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும்.

எனினும், வலியில்லாத தடுப்பூசியாக, நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டது. அதன் பலனாக, இன்கோவேக் எனப்படும் தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது.

தொடர்ந்து, பல்வேறு பரிசோதனை கட்டங்களை நிறைவு செய்தது. அதன் தொடர்ச்சியாக அவற்றை, அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ளும் வகையிலான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றது.

இதனால், உலக அளவில் நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றது.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவேக் என்ற நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயத்திற்கு கடந்த டிசம்பர் இறுதியில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக உள்நாட்டில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து, இந்தியாவில் கடந்த குடியரசு தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திரா சிங், பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா மற்றும் இணை மேலாண் இயக்குனர் சுசித்ரா எல்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனை மத்திய சுகாதார மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்துள்ளார். இதன்படி, கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்களும், பூஸ்டர் டோசாக நாசி வழியே செலுத்தும் இன்கோவேக்கை எடுத்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதுதவிர, கொரோனாவுக்கு எதிராக முதல் மற்றும் 2-வது டோசாகவும் மற்றும் பூஸ்டர் டோசாகவும் இன்கோவேக்கை பயன்படுத்தி கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது, உலக அளவில் முதன்முறையாகும்.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நாசி வழியே தடுப்பு மருந்துகளை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு மற்றும் குறைந்த விலையில் விற்பனைக்கு வரவுள்ளது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனால், ஊசி இன்றி, வலி இன்றி தடுப்பு மருந்து செலுத்தப்படும். பாரத் பயோடெக்கின் இந்த இன்கோவேக் தடுப்பு மருந்து நாட்டின் முதல் பூஸ்டர் தடுப்பு மருந்து என்ற பெருமையையும் பெறுகிறது.

இதுபற்றி பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா கூறும்போது, இந்த கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக்,எடுத்து கொள்வதற்கு எளிது. இதனை செலுத்த ஊசி வேண்டியதில்லை. அதில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் என்னவெனில், தடுப்பு மருந்து எடுத்து கொண்ட பின்னர், 3 வகையான நோயெதிர்ப்பு ஆற்றல் கிடைக்கும்.

இதன்படி, ஐ.ஜி.ஜி., ஐ.ஜி.ஏ. மற்றும் டி செல் ஆகிய எதிர்ப்பு சக்தி கிடைக்க பெறும். இதுவரை உலகில் வேறு எந்த தடுப்பூசிகளும் இதுபோன்ற 3 எதிர்ப்பாற்றலை உற்பத்தி செய்ததில்லை என்று கூறியுள்ளார்.

வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து சந்தையில் இந்த நாசி வழி தடுப்பு மருந்து கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது. இதன்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோசாக இதனை பயன்படுத்த முடியும்.

இதன் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800 என விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.325-க்கு விற்பனை செய்யப்படும். இதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.

இந்த நிலையில், உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக் வினியோகம் தொடங்கி விட்டது என பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா அறிவித்து உள்ளார்.

எல்லா பவுண்டேசன் மற்றும் யூ.டபிள்யூ.-மேடிசன் குளோபல் சுகாதார மையம் இடையேயான இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் இந்த கொரோனா தடுப்பு மருந்து வினியோகம் தொடங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

இதன்படி, இந்தியாவில் நவீன தடுப்பு மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் சர்வதேச சுகாதார கல்வி ஆகியவை முதன்முறையாக இந்தியாவில் நிறுவப்பட இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது. இதனால், 2 நாட்களுக்கு முன்னரே மருத்துவமனைகளுக்கு இன்கோவேக் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் உபயோகத்திற்கு அவை கொண்டு வரப்பட உள்ளன.

இதனை செலுத்துவதற்கு என்று தனியாக, ஊசிகளோ, ஆல்கஹால் துடைப்பானோ, கட்டு போடும் துணி என எதுவும் தேவையில்லை. கொள்முதல், வினியோகம், சேமித்து வைத்தல் மற்றும் உயிர்மருத்துவ கழிவு அகற்றம் என அனைத்து வகையிலும் செலவு மிச்சப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story