சுதந்திர தின சலுகை; ரூ.10 செலுத்தினால் போதும்... கொச்சி மெட்ரோ ரெயிலில் பயணம்


சுதந்திர தின சலுகை; ரூ.10 செலுத்தினால் போதும்... கொச்சி மெட்ரோ ரெயிலில் பயணம்
x

சுதந்திர தின சலுகையாக கொச்சி மெட்ரோ ரெயிலில் ரூ.10 செலுத்தி தொலைதூர இடங்களுக்கு இன்று பயணம் செய்யலாம்.



கொச்சி,



நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், நாடு முழுவதும் ஓராண்டுக்கு சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, கடந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஓராண்டாக சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கொச்சி மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், இந்தியாவின் 75-வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்களுக்கு கொச்சி மெட்ரோ தயாராகி உள்ளது.

இதனை முன்னிட்டு பல்வேறு ரெயில் நிலையங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை சரியான முறையில் கொண்டாடுவதற்காக, பயண சுதந்திர சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன்படி, எந்தவொரு நபரும் கொச்சி மெட்ரோ ரெயிலில் ரூ.10 கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்ளலாம்.

இதற்காக, எந்தவொரு மெட்ரோ ரெயில் நிலையத்திலும் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையில் ரூ.10 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். எவ்வளவு தொலைவு வேண்டுமென்றாலும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொச்சி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் லோக்நாத் பெஹரா முட்டம் பகுதியில் உள்ள ஓ.சி.சி. கட்டிடத்தில் இன்று தேசிய கொடியை ஏற்றினார்.

இதேபோன்று ரெயில் நிலையங்களில் நாட்டுப்பற்று பாடல்கள், நடனங்கள் உள்ளிட்டவற்றை பள்ளி மாணவர்கள் வழங்குகின்றனர். பிளாஸ்டிக்கில் இருந்து விடுதலைக்கான பிரசாரத்தின்படி, 10 ஆயிரம் பருத்தியினால் ஆன பைகள் பயணிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளன. இதுதவிர, மேஜிக் ஷோக்கள் மற்றும் கராத்தே போட்டிகளையும் நடத்தி பள்ளி மாணவர்கள், ரெயில் பயணிகளை மகிழ்விக்க உள்ளனர்.


Next Story