இந்தியாவில் அமைக்கப்படும் செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கு 50 சதவீத நிதியுதவி பிரதமர் மோடி அறிவிப்பு


இந்தியாவில் அமைக்கப்படும் செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கு 50 சதவீத நிதியுதவி பிரதமர் மோடி அறிவிப்பு
x

இந்தியாவில் அமைக்கப்படும் செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கு 50 சதவீத நிதியுதவி பிரதமர் மோடி அறிவிப்பு

காந்திநகர்,

இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனங்கள் அமைப்பவர்களுக்கு 50 சதவீத நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

குஜராத் தலைநகர் காந்திநகரில் 'செமிகான் இந்தியா 2023' என்ற பெயரில் செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களின் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியை தொடங்கும் நிறுவனங்களுக்கு 50 சதவீத நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவின் விருப்பம்

உலகம் கண்ட ஒவ்வொரு தொழில் புரட்சியும் வெவ்வேறு காலகட்டங்களில் மக்களின் தேவை சார்ந்த விருப்பங்களால் உந்தப்பட்டது. தற்போது நான்காவது தொழில் புரட்சி இந்தியாவின் விருப்பங்களால் இயக்கப்படுகிறது என்று நம்புகிறேன்.

செமிகண்டக்டர் தொழில் வளர்ச்சிக்கான முழுமையான சூழல் அமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து அரசு வரவேற்கிறது.

செமிகான் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக நாங்கள் ஊக்கத்தொகைகளை வழங்குகிறோம். இது அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி வசதிகளை அமைக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீத நிதி உதவியைப் பெறும்.

இந்தியாவில் செமிகண்டக்டர் துறை அதிவேக வளர்ச்சியை காணும்.

ஓராண்டுக்கு முன்பு வரை, இந்திய செமிகண்டக்டர் துறையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? என வினாவினர். தற்போது இந்தியாவில் ஏன் முதலீடு செய்யக்கூடாது? என கேட்கின்றனர்.

இன்றைய உலகம் தொழில்துறை 4.0-க்கு சாட்சியாகி வருகிறது. இதுபோன்ற தொழில் புரட்சியை உலகம் கடந்து செல்லும் போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களின் விருப்பங்களே அதன் அடிப்படையாக இருந்து வருகிறது. முதல் தொழிற்புரட்சிக்கும் அமெரிக்க கனவுக்கும் இடையே அதே தொடர்பு காணப்பட்டது.

இன்று நான்காவது தொழில் புரட்சிக்கும் இந்திய விருப்பங்களுக்கும் உள்ள அதே தொடர்பை நான் காண்கிறேன். இந்திய விருப்பங்கள் நாட்டின் வளர்ச்சியை உந்தித் தள்ளுகிறது. அத்துடன் தீவிர வறுமையை விரைவாக ஒழித்து கீழ் நடுத்தர வர்க்கத்தின் விரைவான எழுச்சியை காணும் தேசமாக மாற்றியுள்ளது.

இந்தியா தனது சர்வதேச ெபாறுப்புணர்வை புரிந்து கொண்டுள்ளது.

எனவே நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து பரந்த செயல் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கு உகந்த சூழலை உருவாக்க நாங்கள் சிறந்த முயற்சிகளை எடுத்து வருகிறோம்

இதற்காக நாங்கள் என்ஜினீயரிங் பாடத்திட்டத்தை மாற்றுகிறோம். 300-க்கும் மேற்பட்ட பெரிய கல்லூரிகளில் செமிகண்டக்டர்கள் குறித்த படிப்புகள் வழங்கப்படும்.

இதன் மூலம் இந்த துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான வடிவமைப்புப் பொறியாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தொடர்ந்து வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பு செமிகண்டக்டர் துறைக்கும் பெரும் பலத்தை அளிக்கும்.

இந்த துறைக்காக மின்சார தேவை இருக்கும் நிலையில், நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சோலார் மின் உற்பத்தி திறன் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு 10 ஆண்டுக்குள் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் பசுமை ஹைட்ரஜன், எலக்ட்ரோலைசர்களுக்காக பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நடைபெறும் கொள்கை சீர்திருத்தங்கள் கூட செமி கண்டக்டர் சூழியல் அமைப்பில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதிய உற்பத்தித் தொழிலுக்கு, பல்வேறு வகையான வரிச் சலுகைகளை அறிவித்துள்ளோம். கார்பரேட் வரி குறைவாக உள்ள நாடுகளில் இந்தியா இன்று உள்ளது. நாங்கள் வரிவிதிப்பு செயல்முறையை தடையற்றதாக மாற்றியுள்ளோம்.

ஜி20 அமைப்பின் தலைவராக, இந்தியா வழங்கிய கருப்பொருள் கூட 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' ஆகும்.

இவை அனைத்தும் இந்தியாவை செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவதன் பின்னணியில் உள்ள நமது உணர்வுகள் ஆகும். இந்தியா தனது திறமை மற்றும் திறன் மூலம் உலகிற்கு நன்மை செய்ய விரும்புகிறது. சிறந்த உலகத்திற்காகவும், உலகளாவிய நன்மைக்காகவும் இந்தியாவின் திறனை அதிகரிக்க விரும்புகிறோம். இதில், உங்கள் பங்கேற்பு, ஆலோசனைகள் மற்றும் எண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்வாறு பிரதமர் ேமாடி கூறினார்.

இந்த மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த செமி கண்டக்டர் கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story