இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி : மழையால் ஆட்டம் பாதிப்பு


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி : மழையால் ஆட்டம் பாதிப்பு
x

Image Tweeted By @BCCI

இந்தியா 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தனர். சிறப்பான பார்மில் உள்ள இந்த தொடக்க ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். ஷிகர் தவான் 50 ரன்களை கடக்க இந்த ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தனர். தவான் 58 ரன்கள் எடுத்திருந்த போது வால்ஷ் பந்துவீச்சில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். இந்திய அணி 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் போட்டி தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் 51 ரன்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Next Story