இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகம்


இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகம்
x

இந்திய விமானப்படையின் புதிய கொடியை விமானப்படை தளபதி அறிமுகப்படுத்தினார்.

இந்திய விமானப்படை

இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் அதன் பங்களிப்பை பாராட்டி, 1945-ம் ஆண்டு அதன் பெயர் 'ராயல் இந்திய விமானப்படை' என்று மாற்றப்பட்டது. அதற்கென ஒரு கொடி உருவாக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1950-ம் ஆண்டு முதல், 'இந்திய விமானப்படை' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. அதன் கொடியும் மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு, இந்திய கடற்படையின் கொடி மாற்றப்பட்டது. அதுபோல், இந்திய விமானப்படைக்கும் நேற்று புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய கொடி

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், 91-வது இந்திய விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடந்தன. அதையொட்டி, விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. விமானப்படை அணிவகுப்பும் நடந்தது. அதில், விமானப்படைக்கான புதிய கொடியை விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி அறிமுகப்படுத்தினார். அந்த கொடி, நீல நிற பின்னணியில் அமைந்துள்ளது. இடதுபுறம், தேசிய கொடி உள்ளது. வலதுபுற மேல்பக்கத்தில், 4 சிங்கங்கள் கொண்ட தேசிய சின்னத்துடன், விமானப்படை சின்னம் அமைந்துள்ளது. அதில், 'சத்யமேவ ஜெயதே' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அணிவகுப்பு

அதன் கீழே, இமயமலை கழுகு சிறகு விரித்து பறப்பது போன்ற படம், நீலநிற வளையத்துக்கு உள்ளே அமைந்துள்ளது. அதில், 'பாரதீய வாயுசேனா' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கொடியை பிடித்தபடி, விமானப்படை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.

''நாம் விரும்பிய உயரத்துக்கு விமானப்படையை கொண்டு செல்ல அனைவரும் இணைந்து பாடுபடுவோம்'' என்று விமானப்படை தளபதி சவுத்ரி பேசினார். ''இந்த நாள், இந்திய விமானப்படை வரலாற்றில் மறக்க முடியாத நாள்'' என்று விமானப்படை தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளது.


Next Story