ராஜஸ்தானில் ரெயில்வே பாலத்தில் நடந்த வெடிவிபத்து பயங்கரவாதிகளின் சதியா? உளவுத்துறை விசாரணை


ராஜஸ்தானில் ரெயில்வே பாலத்தில் நடந்த வெடிவிபத்து பயங்கரவாதிகளின் சதியா? உளவுத்துறை விசாரணை
x

உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் ஆமதாபாத் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திறந்து வைத்தார். நேரடி இணைப்பு மூலம் பயண நேரம் 10 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரமாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், உதய்பூர்-அசர்வா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்ட 90 நிமிடங்களுக்குப் பிறகு, ஜோவார் மற்றும் கர்வா சந்தா இடையே உள்ள பாலத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.

வடமேற்கு ரெயில்வே மண்டலத்தின் கீழ் வரும், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோவார் மற்றும் கர்வா சந்தா ரெயில் பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது.இந்த பாலத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தகர்க்க முயன்றதாக கூறப்படுகிறது. ​​பல இடங்களில் ரெயில் தண்டவாளம் உடைந்து காணப்பட்டது. ரெயில் பாதையில் வெடிமருந்து கண்டெடுக்கப்பட்டது.

13 நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட உதய்பூர்-ஆமதாபாத் ரெயில் பாதையில் கட்டப்பட்ட ரெயில் பாலத்தில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்ட சம்பவம் சுற்றுவட்டார மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

போலீசாரின் விசாரணையில், இதற்கு டெட்டனேட்டர் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதச் சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதால், பயங்கரவாத எதிர்ப்புப் படையும் (ஏடிஎஸ்) சம்பவ இடத்துக்குச் சென்று,

இந்த சம்பவம் குறித்து உளவுத்துறையினர் கூடுதல் விவரங்களை கண்டுபிடித்து வருகின்றனர். இதன் காரணமாக, ரெயில் பாலம் மூடப்பட்டது. சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் ராஜஸ்தான் காவல்துறையும் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், ரெயில் பாதையில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டதாக எப்ஐஆர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உளவுத்துறையினர் தரப்பில் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புதிதாக திறக்கப்பட்ட ரெயில் பாதை, சாலைகள் மற்றும் வணிக போக்குவரத்துக்கு தடையாக உள்ளது. ஆகவே சிலர் இத்தகைய சதிச்செயலை செய்திருக்கலாம். இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்நாட்டில் வாங்கப்பட்ட பொருட்களைக் கொண்டு வெடிமருந்துகளை தயாரித்தனர் என்பது தெரிய வந்துள்ளது. அதேவேளையில், இந்த சம்பவத்திற்கு, பயங்கரவாத சதிக்கும் தொடர்பில்லை என்பதை உளவுத்துறை அதிகாரிகள் மறுக்கவில்லை.

ரெயில்வே பொறியாளர்கள் தண்டவாளத்தை சரி செய்துவிட்ட நிலையில், அந்த வழித்தடம் ரெயில்கள் இயக்கத்திற்கு ஏற்றதாக உள்ளதாக நேற்று அறிவித்தனர்.


Next Story