இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம் நடைபெற வாய்ப்பு - மத்திய மந்திரி பியூஷ் கோயல் நம்பிக்கை


இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம் நடைபெற வாய்ப்பு - மத்திய மந்திரி பியூஷ் கோயல் நம்பிக்கை
x

விரைவில் இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச அளவிலான வர்த்தகத்தை ரூபாயில் மேற்கொள்வதற்கான கணக்குகளை துவங்க 18 நாடுகளை சேர்ந்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கு சிறப்பு ரூபாய் வோஸ்த்ரோ (SRVAs) கணக்குகளை துவங்க இங்கிலாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்பட 18 நாடுகளில் உள்ள வங்கிகளிடம் இருந்து 60 கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் பல்வேறு நாடுகளின் வங்கிகளுடன் ரிசர்வ் வங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் விரைவில் இந்திய ரூபாயில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது."

இவ்வாறு மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


Next Story