அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவதுபோல ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா?


அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவதுபோல    ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா?
x

அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவதுபோல ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா என்பது பற்றி பொதுமக்கள் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.

பொதுமக்கள் கருத்து

காகித பணம்

பணமா, குணமா என்றால் இன்றைய நாகரிக உலகில் பணத்துக்கே முதலிடம் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. பணத்தை வைத்து தான் ஒருவருடைய அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பணம்.... பணம்.... பணம்.... இந்த வார்த்தை ஒன்றுதான் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882-ம் ஆண்டு முதல் முறையாக காகித பணம் புழக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.2, ரூ.5, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் நோட்டுகள் நாளடைவில் கைவிடப்பட்டன.

அதன்பின்னர் 1969-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 100-வது பிறந்தநாளையொட்டி, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன்தொடர்ச்சியாக ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. 1987-ம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டையும், 2000-ம் ஆண்டில் ரூ.1,000 நோட்டையும் புழக்கத்துக்கு விட்டனர். 2016-ம் ஆண்டில் ரூ.2 ஆயிரம் நோட்டும் வந்தது. இப்போது 1,000 ரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் இல்லை.

ரூபாய் நோட்டுகள்

இப்படியாக ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், அதில் பொறிக்கப்பட்ட படங்களில் வரலாறும் அனைவராலும் பேசக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பின், வெளியான ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கங்கள் உருவம் பொறிக்கப்பட்டு வெளியானது. அதனைத்தொடர்ந்து புலி, மான், தஞ்சை பெரிய கோவில், மும்பை கேட்வே ஆப் இந்தியா, நாடாளுமன்றம், பசுமைப்புரட்சி-உழவுத்தொழில்-விவசாய வேலைகள்-அணைக்கட்டுகள், இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆரியபட்டா, ஹிராகுட் அணை, டிராக்டர் படங்கள் ரூபாய் நோட்டுகளில் உருவங்களாக பொறிக்கப்பட்டு வெளிவந்தன.

இன்று நாம் பயன்படுத்தகூடிய ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் இருக்கிறது. இதன் வரலாறை பார்த்தோமானால், 1969-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகளில் தான் காந்தியின் உருவப்படம் முதன் முதலாக பொறிக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் மற்ற ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, 1996-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுகளின் முகப்பில் பெரிய அளவிலான காந்தியின் உருவப்படமே பொறிக்கப்பட்டு வருகின்றன. அதே போல் நோட்டுகளின் மறுபக்கத்தில் இந்தியாவின் நினைவு சின்னங்கள், பாரம்பரிய இடங்களின் படங்களும் அப்போது முதல் இடம்பெற்று வருகின்றன.

லட்சுமி, விநாயகர் உருவப்படம்

இந்த சூழ்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்தையும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவங்களையும் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.

இவருடைய இந்த கோரிக்கை, அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இவருக்கு போட்டியாக பிற அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்து வருகின்றன. அதில் காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை அச்சிடலாமே என்று கூறியிருக்கிறார். மராட்டிய மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதமும் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி சரியானதா? தற்போதைக்கு அவசியமானதா? இதனால் மாற்றம் ஏற்படுமா? என்பது குறித்து மக்கள் கருத்துகள் பின்வருமாறு:-

மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டாம்

பெங்களூரு காந்தி நகர் வார்டு பிளாக் காங்கிரஸ் தலைவரான சரவணா, "ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் உள்ள சூழ்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து உள்ளார். இந்தியா பல சாதி, மதங்களை கொண்ட ஒற்றுமையான நாடு. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சிடுவது தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தும். இதன்மூலம் மக்களிடம் ஒற்றுமை சீர்குலையும். நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினை எவ்வளவோ உள்ளது. அந்த பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். ரூபாய் நோட்டு மூலம் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி வேண்டாம்" என்றார்.

ராஜாஜிநகர் பிரகாஷ் நகர் வார்டு

ஆம் ஆத்மி கட்சியின் பெண் பிரமுகர் லீலாவதி, "இந்தியாவில் 85 சதவீதம் இந்துக்கள் வசித்து வருகின்றனர். இந்த அடிப்படையில் தான் ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படங்களை அச்சிட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நாம் பணத்தை லட்சுமி மாதிரி தான் பார்க்கிறோம். இதனால் ரூபாய் நோட்டில் லட்சுமியின் உருவப்படத்தை அச்சிட்டால் என்ன தவறு?. இந்தோனேசியா நாட்டில் ரூபாய் நோட்டில் விநாயகர் உருவப்படம் உள்ளது. அதுபோல இந்திய ரூபாய் நோட்டிலும் லட்சுமி, விநாயகர் உருவப்படத்தை அச்சிடலாம். அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து கோரிக்கை தான் வைத்து உள்ளார். அதை நிறைவேற்றுவது மத்திய அரசின் கையில் உள்ளது" என்றார்.

ஒரு மதத்தை திருப்திபடுத்தும் செயல்

மங்களூரு டவுன் அட்டாவர் பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி சாந்தகுமார், "லட்சுமி இந்துக்களின் தெய்வம். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடு என்று கூறுகிறோம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகரின் உருவப்படம் அச்சிடுவது சரியாக இருக்காது. நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்தது. விட்டு கொடுத்து வாழும் மனப்பான்மை உள்ள பூமி. ரூபாய் நோட்டில் லட்சுமியின் உருவப்படத்தை அச்சிடுவது ஒரு மதத்தை திருப்திபடுத்தும் செயல். இது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது போன்ற ஒரு பிரச்சினையை கொண்டு வருவது தேவையற்றது" என்றார்.

பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் முத்துக்குமார், "ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் உருவப்படத்தை அச்சிடலாம். ஆனால் ரூபாய் நோட்டு அனைத்து மதத்தினரும் பயன்படுத்த கூடியது. லட்சுமி உருவப்படம்

அச்சிடுவதன் மூலம் வேறு மதத்தினரின் மனம் புண்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படும். இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் இப்படியே விட்டு விட்டால் நல்லது" என்றார்.

வாக்கு வங்கி அரசியல்

பெங்களூருவில் செயல்பட்டு வரும் தனஅபிவிருத்தி கிரெடிட் கோ ஆபரேடிவ் சொசைட்டி நிறுவன தலைவர் சுந்தரவேலு, "ரூபாய் நோட்டுகள் பொதுவானது. அதற்கு எந்த நிறமும் இல்லை. ரூபாய் நோட்டுகள் இனம், மொழி, சாதிக்கு அப்பாற்பட்டது. இன்று லட்சுமியின் உருவப்படத்தை அச்சிட வேண்டும் என்கிறார்கள். சிலர் அம்பேத்கர் உருவப்படத்தை அச்சிட வேண்டும் என்கிறார்கள். நாளை இயேசு, மசூதியின் உருவப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிட சொல்வார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தலைசிறைந்த தலைவர். அவர் இப்படி கூறியது சரியல்ல. அவர் தனது கருத்தை பதிவு செய்யும் முன்பு யோசித்து பேச வேண்டும். அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது" என்றார்.

பிரபல பொருளாதார நிபுணர்

சோம.வள்ளியப்பன் கூறுகையில், "பொருளாதார வளர்ச்சி மற்றும் பணப்பெருக்கத்துக்கும், லட்சுமி- விநாயகர் உருவங்களை அச்சிட வேண்டும் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம்பிக்கை ரீதியில் அவர் சொல்லி இருக்கலாம். அரவிந்த் கெஜ்ரிவால் நன்கு படித்தவர். அவர் வேறு ஒரு உள்நோக்கத்துக்காக தான் இதை சொல்லியிருக்க வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். உலகில் முன்னேறிய நாடுகள் கூட இப்படி முயற்சித்தது கிடையாது. மதிப்புமிக்க, வணங்கக்கூடிய இறைவனை இப்படி பயன்படுத்துவது சரியாக இருக்காது. மற்ற மதத்தினரும் இப்படி தங்கள் கடவுளைஅச்சிட சொன்னால் என்ன செய்வார்கள்?. வாக்கு வங்கி அரசியலுக்காக இதை செய்வதாகவே நான் கருதுகிறேன். இதன் மூலம் வாக்குகள் கிடைக்கும் என்றாலும், அதுவும் நடக்குமா? கேள்விக்குறி தான்" என்றார்.


Next Story