மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாக்குலின் பெர்னாண்டசை அறிமுகம் செய்த பெண் கைது


மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாக்குலின் பெர்னாண்டசை அறிமுகம் செய்த பெண் கைது
x

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாக்குலின் பெர்னாண்டசை அறிமுகம் செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைதாகி சிறையில் உள்ளார். இவர் மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சொகுசு கார்கள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுத்ததாக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்திருந்தது அமலாக்கத்துறை. இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகம் செய்த பிங்கி இரானி என்கிற பெண்ணை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதுபற்றி டெல்லி காவல்துறை செய்தி தொடர்பாளர் சுமன் நல்வா கூறுகையில், "இந்த வழக்கில் மும்பையை சேர்ந்த பிங்கி இரானிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.


Next Story