பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஜன.1 முதல் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பு


பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஜன.1 முதல் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2023 1:56 AM GMT (Updated: 10 Oct 2023 6:40 AM GMT)

பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஜன.1 முதல் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூரி,

ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலினுள் கேமரா, செல்போனை கொண்டு செல்லவும், படம் எடுக்கவும் தடை உள்ளது.

இந்த நிலையில், கோவிலில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோவிலில் சிலர் "அநாகரீகமான" உடை அணிந்து வருவதால், 'நிதி' துணைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதுகுறித்து கோவில் நிர்வாகத் தலைவர் ரஞ்சன் குமார் தாஸ் கூறும்போது,

"கோவிலின் கண்ணியத்தையும், புனிதத்தையும் காப்பது எங்கள் பொறுப்பு. துரதிர்ஷ்டவசமாக, சிலர் மற்றவர்களின் மத உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் கோவிலுக்குச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.

சிலர் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட், ஸ்லீவ்லெஸ், அரைக் கால்சட்டை அணிந்து, கடல் கடற்கரையிலோ, பூங்காவிலோ உலா வருவது போல் கோவிலில் காணப்பட்டனர். கோவில் கடவுளின் இருப்பிடம், பொழுதுபோக்கிற்கான இடம் அல்ல. எந்த வகையான ஆடைகளை அனுமதிக்க வேண்டும் என்பது விரைவில் முடிவு செய்யப்படும். கோவில் நிர்வாகம் பக்தர்களிடையே ஆடைக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கும்." என்று அவர் கூறினார்.


Next Story