கல்கட்டகியில் பெண் தற்கொலை வழக்கில் பா.ஜனதா பிரமுகர் கைது


கல்கட்டகியில் பெண் தற்கொலை வழக்கில் பா.ஜனதா பிரமுகர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:45 PM GMT)

கல்கட்டகியில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த வழக்கில் பா.ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

உப்பள்ளி-

கல்கட்டகியில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த வழக்கில் பா.ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

தொழிலாளி

தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா போகேநாகரகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் திப்பன்னவர் (வயது35). இவருக்கும் பைரதேவரகொப்பா பகுதியை சேர்ந்த சுமங்கலா (29) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்தின் போது சுமங்கலாவின் பெற்றோர் ரூ. 5 லட்சம் தங்க நகையை வரதட்சணையாக கொடுத்து அனுப்பினர்.

இந்தநிலையில் கடந்த வாரம் சுமங்கலா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கல்கட்டகி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமங்கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக சுமங்கலாவின் பெற்றோர் கல்கட்டகி போலீசில் புகார் அளித்தார்.

வரதட்சணை கொடுமை

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பிரவீன் சுமங்கலாவை வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் பிரவீன் பெற்றோர், தம்பி மகேஷ் ஆகியோர் சேர்ந்து சுமங்கலாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால், கடந்த சில நாட்களாக சுமங்கலா, பிரவீன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனவேதனை அடைந்த சுமங்கலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பிரவீன் மற்றும் அவரது பெற்றோர், தம்பி மகேஷ் ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை என வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இதில் பிரவீன், அவரின் பெற்றோரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.

பா.ஜனதா பிரமுகர் கைது

இதில், தொடர்புடைய மகேசை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் மகேஷ் கல்கட்டகியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று காலை அங்கு சென்று மகேசை கைது செய்தனர். பின்னர் அவரை தார்வார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மகேஷ் பா.ஜனதா பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story