மெட்ரோ ரெயிலில் கோபி மஞ்சூரியனை ருசித்த நகைக்கடை ஊழியருக்கு ரூ.500 அபராதம்


மெட்ரோ ரெயிலில் கோபி மஞ்சூரியனை ருசித்த நகைக்கடை ஊழியருக்கு ரூ.500 அபராதம்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:46 PM GMT)

பெங்களூருவில் வீதிமீறி மெட்ரோ ரெயிலில் கோபி மஞ்சூரியன் ருசித்த நகைக்கடை ஊழியருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

பெங்களூரு:-

பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயிலுக்குள் பயணிகள் போதை பொருட்களை பயன்படுத்துவது, உணவு அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு சவுத் என்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள மெட்ரோ ரெயிலில் ஒரு பயணி பயணம் செய்துள்ளார். அப்போது அந்த நபர் ஓடும் மெட்ரோ ரெயிலில் கோபி மஞ்சூரியனை ருசித்தபடி பயணித்துள்ளார். இதனை அவருடன் வந்த ஒருவரே செல்போனில் வீடியோவாக எடுத்்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மெட்ரோ ரெயிலில் உணவு பொருட்களை சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விதிமீறி அந்த நபர் கோபி மஞ்சூரியனை ருசித்ததற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி மெட்ரோ ஊழியர்கள் ஓடும் ரெயிலில் கோபி மஞ்சூரியை ருசித்த நபர் பற்றி விசாரணைைய தீவிரப்படுத்தினர். இதில், அந்த நபர் பெயர் சுனில்குமார் என்பதும், இவர் பெங்களூரு ஜெயநகரில் உள்ள நகைக்கடை ஊழியர் என்பதும், சம்பிகே ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து நண்பர்களுடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த சுனில்குமார், சவுத் என்ட் சர்க்கிள் நோக்கி சென்ற போது கோபி மஞ்சூரியனை ருசித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மெட்ரோ நிர்வாகம் ரூ.500 அபராதம் விதித்தது. இதுபோன்ற விதிமீறலில் இனிமேல் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.


Next Story