ஜார்கண்டில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு


ஜார்கண்டில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 Jun 2023 11:19 AM GMT (Updated: 9 Jun 2023 12:31 PM GMT)

ஜார்கண்டில் நிலக்கரி சுரங்க விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என போலீசார் தெரிவித்தனர்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென சரிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தை கண்ட உள்ளூர் வாசிகள் , இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் 3 பேரை மீட்டு, அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இங்கு உள்ளூர் வாசிகள் பலர் இந்த சுரங்கத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி எடுக்கும் செயலில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் ஒருவர் கூறியுள்ளார்.இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருவதாக போவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் பினோத் ஓரான் தெரிவித்தார்.

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), சிந்த்ரி, அபிஷேக் குமா கூறுகையில், மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து முடிந்த பிறகே, இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் சிக்கிய அல்லது காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவரும், என தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


Next Story