ஜே.என்.யூ. பேராசிரியரை கடத்தி, அடைத்து வைத்து 3 மணிநேரம் கொடுமை


ஜே.என்.யூ. பேராசிரியரை கடத்தி, அடைத்து வைத்து 3 மணிநேரம் கொடுமை
x

ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தின் பேராசிரியரை காரில் இருந்து கடத்தி, அடைத்து வைத்து கும்பல் ஒன்று 3 மணிநேரம் கொடுமை செய்துள்ளது.



புதுடெல்லி,



டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சரத் பவிஸ்கார். இவர் நாராயணா காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், கடந்த வெள்ளி இரவு பல்கலை கழகத்தின் வளாகம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தேன். இதில் சாலையில் சிலர் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி போலீசில் புகார் அளிப்பேன் என கூறினேன். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர்கள் (அடையாளம் தெரியவில்லை) என்னை காரில் இருந்து, வெளியே இழுத்து போட்டு, கடத்தி சென்றனர் என தெரிவித்து உள்ளார்.

இதன்பின்னர் வீடு ஒன்றுக்கு கொண்டு சென்று 3 மணிநேரம் வரை அவரை அடைத்து வைத்துள்ளனர். பேராசிரியரை அடித்து, தாக்கியதுடன் அவருடைய பணமும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. கடத்தல்காரர்களிடம் தன்னை விடுவிக்கும்படி அவர் கூறியுள்ளார்.

ஆனால், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து, உதைத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்து உள்ளனர். பணம் கேட்டு மிரட்டியும் உள்ளனர். இதுபற்றிய வழக்கில் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில், ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு அவருக்கு ஆதரவாக வருத்தம் தெரிவித்து உள்ளது. குற்றவாளிகளை டெல்லி போலீசார் கைது செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளதுடன், பேராசிரியர் மற்றும் அவரது குடும்பத்துக்கு போலீசாரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.


Next Story