மண்டியாவில், வருகிற 28-ந் தேதி கன்னட பாடல்கள் பாடப்படும்


மண்டியாவில், வருகிற 28-ந் தேதி கன்னட பாடல்கள் பாடப்படும்
x
தினத்தந்தி 19 Oct 2022 6:45 PM GMT (Updated: 19 Oct 2022 6:46 PM GMT)

கன்னட ராஜ்யோத்சவாவையொட்டி மண்டியாவில் வருகிற 28-ந் தேதி கன்னட பாடல்கள் பாடப்படும் என்று துணை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மண்டியா:

மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 67-வது கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட துணை கலெக்டர் எச்.எல்.நாகராஜ் கூறியதாவது:- கர்நாடக முழுவதும் வருகிற நவம்பர் 1-ந் தேதி கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் மாநில முழுவதும் ஒரே நேரத்தில் கன்னட கொடிகளை ஏற்றி ராஜ்யோத்சவா விழாவை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலைகள், குடியிருப்புகளில் நடைபெறும் கன்னட ராய்யோத்சவா விழாவில் கலந்து கொள்ள செய்யவேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அதற்கான அனைத்து ஏற்பாடுகளை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் செய்து வருகிறது.

அதே போல் மண்டியா மாவட்டத்திலும் வருகிற 1-ந் தேதி கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடப்படும். இதற்கு முன்னதாக வருகிற 28-ந் தேதி மண்டியாவில் மட்டும் கன்னட பாடல்களை அனைத்து தாலுகா, கிராமங்களில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி, அரசு குடியிருப்பு, அலுவலகங்களில் பாடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவ-மாணவிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோரை ஒன்றினைத்து பாடல்களை பாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான பணிகளில் மாவட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும். மேலும் விழா நடைபெறும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்திருக்கவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பொறுப்பேற்று செயல்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story