காரைக்காலில் காலரா கட்டுப்பாட்டில் வந்துள்ளது: முதல்-மந்திரி ரங்கசாமி


காரைக்காலில் காலரா கட்டுப்பாட்டில் வந்துள்ளது:   முதல்-மந்திரி  ரங்கசாமி
x
தினத்தந்தி 5 July 2022 8:49 AM GMT (Updated: 5 July 2022 9:30 AM GMT)

காரைக்காலில் காலரா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுவை,

காரைக்கால் மாவட்டத்தில் பலருக்கு காலரா நோய் அறிகுறி ஏற்பட்டுள்ள நிலையில், பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தம் செய்து பீளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில், முதல்-மந்திரி ரங்கசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் குடிநீர் குழாய்கள் புதிதாக பதிப்பதற்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடூ செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் மருத்துவமனை விரிவாக்க பணிகளுக்கு 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக 2000 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் தற்பொழுது புத்துயிர் பெற்றுள்ளன. காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை பணிகள் நிறைவு பெற்று விரைவில் திறக்கப்படும். காரைக்கால் மீது அன்பு கொண்டவன் நான் காரைக்கால் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. காரைக்காலில் காலரா கட்டுக்குள் வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story