கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க சட்ட அமைச்சகம் ஒப்புதல்


கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க சட்ட அமைச்சகம் ஒப்புதல்
x

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் கடந்த டிசம்பர் 25-ந்தேதி ஓய்வு பெற்றார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியத்தின் கூட்டம் கடந்த 19-ந்தேதி நடந்தது. இதில் நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அனிருதா போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் கடந்த டிசம்பர் 25-ந்தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, காலியாகி இருக்கும் அந்த இடத்துக்கு நீதிபதியை நியமிப்பது குறித்து கொலிஜியம் பரிசீலித்தது.

இதையடுத்து கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டது. ஐகோர்ட்டு நீதிபதிகளில் மிகவும் மூத்த நீதிபதியும், எஸ்.சி. பிரிவை சேர்ந்த ஒரே ஐகோர்ட்டு தலைமை நீதிபதியும் பிரசன்னா பி.வரலே என்பதையும் கொலிஜியம் கருத்தில் கொண்டதாக சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. நீதிபதிகளின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு காலியிடத்தை விரைவாக நிரப்புவது அவசியமானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதிகள் பி.ஆர் கவாய், சி.டி ரவிக்குமாரை தொடர்ந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூன்றாவது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரசன்னா பி.வரலே இருப்பார்.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜனாதிபதி, இந்திய தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரசன்னா பி.வராலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story