கர்நாடக முதல்-மந்திரி ஆகிறாரா...? காங்கிரஸ் தலைமையை சந்திக்க டெல்லி புறப்பட்டார் சித்தராமையா


கர்நாடக முதல்-மந்திரி ஆகிறாரா...? காங்கிரஸ் தலைமையை சந்திக்க டெல்லி புறப்பட்டார் சித்தராமையா
x
தினத்தந்தி 15 May 2023 9:02 AM GMT (Updated: 15 May 2023 9:18 AM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின் காங்கிரஸ் கட்சி தலைமையை சந்திக்க சித்தராமையா டெல்லிக்கு இன்று மதியம் புறப்பட்டு சென்றார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அக்கட்சி, பெரும்பான்மைக்கு தேவையான 113 தொதிகளை காட்டிலும் கூடுதலாக, 137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இதனால், கூட்டணி தேவை எதுவுமின்றி தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரம் பெற்று உள்ளது.

பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால், தேர்தலில் தேல்வி அடைந்து உள்ளது. 36 ஆண்டுகளுக்கு பின்னர் 137 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் பிரதேச கமிட்டி தலைவரான டி.கே. சிவக்குமார் மிக அதிக அளவாக 1,22,392 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனகபுரா தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

இதேபோன்று, வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்-மந்திரி மற்றும் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் வி. சோமண்ணாவை 46,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டு 2 நாட்கள் ஆன சூழலில், கர்நாடக முதல்-மந்திரி யார்? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சி தேர்தலில் முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான போட்டி நிலவியது. முதல்-மந்திரி பதவியை கட்சி வழங்கினால் ஏற்று கொள்வேன் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

இந்த சூழலில், கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரி என டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோரின் ஆதரவாளர்கள், அவர்கள் இருவரின் போஸ்டர்களை பல பகுதிகளில் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தினர்.

இதனால், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் ஏற்பட கூடிய சூழல் உருவானது. இந்த சூழலில், அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதுபற்றி மல்லிகார்ஜூன கார்கே அளித்த பேட்டியில், நாங்கள் மந்திரி சபை அமைத்த பின்னர், தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்த அனைத்து 5 வாக்குறுதிகளையும் அமல்படுத்துவோம் என கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சி கூட்டத்தின் அறிக்கை கட்சி மேலிடத்திற்கு வழங்கப்படும். அதன்பின்னர் அந்த அறிக்கையை கொண்டு கட்சி தலைமை ஆலோசித்து, முடிவு செய்து கர்நாடக முதல்-மந்திரி யாரென்று அறிவிக்கும் என கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்திப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா டெல்லிக்கு இன்று மதியம் புறப்பட்டு செல்வார் என கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவர் பெங்களூருவில் உள்ள ஷாங்ரி-லா ஓட்டலில் காங்கிரசார் நியமித்த கண்காணிப்பு குழுவினரை சந்தித்து பேசினார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் என்ன பணியை செய்ய வேண்டுமோ, அந்த பணியை செய்து விட்டேன். என்னை டெல்லிக்கு அழைப்பது பற்றி கட்சியின் உயர்மட்டம் கூடி முடிவு செய்ய வேண்டும்.

நாங்கள் ஒரு-வரி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். கட்சியின் தலைமைக்கு முடிவை விட்டு விடுவது என்பதே அது. டெல்லிக்கு போவது பற்றி நான் முடிவு செய்யவில்லை என அவர் இன்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், சித்தராமையா இன்று மதியம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார் என கட்சி தெரிவித்து உள்ளது. அதனால், கர்நாடகாவின் முதல்-மந்திரியாக மீண்டும் சித்தராமையா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


Next Story