ரெயில்முன் பாய்ந்து கேரள பல் டாக்டர் தற்கொலை- பாலியல் வழக்கில் போலீசுக்கு பயந்து விபரீதம்


ரெயில்முன் பாய்ந்து கேரள பல் டாக்டர் தற்கொலை-  பாலியல் வழக்கில் போலீசுக்கு பயந்து விபரீதம்
x
தினத்தந்தி 11 Nov 2022 6:45 PM GMT (Updated: 11 Nov 2022 6:46 PM GMT)

குந்தாப்புராவில், ஓடும் ரெயில்முன் பாய்ந்து கேரள பல் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். பாலியல் வழக்கில் போலீசுக்கு பயந்து இந்த துயர முடிவை அவர் எடுத்துள்ளார்.

உடுப்பி: குந்தாப்புராவில், ஓடும் ரெயில்முன் பாய்ந்து கேரள பல் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். பாலியல் வழக்கில் போலீசுக்கு பயந்து இந்த துயர முடிவை அவர் எடுத்துள்ளார்.

டாக்டர் பிணமாக மீட்பு

உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து குந்தாப்புரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குந்தாப்புரா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கேரளா மாநிலம் காசர்கோடை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 52) என்று தெரியவந்தது.

பல் டாக்டரான அவர் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் ஒருவரிடம் கிருஷ்ணமூர்த்தி தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை அந்த பெண் தனது சகோதரர்களிடம் கூறினார். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். மேலும் போலீசிலும் புகார் அளித்தனர்.

தற்கொலை

இந்த புகாரின் பேரில் பாலியல் தொல்லை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை விசாரணைக்காக தேடியுள்ளனர். போலீசாருக்கு பயந்து அவர் அங்கிருந்து உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவிற்கு வந்து ஓடும் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கேரளா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தற்கொலை சம்பவம் குந்தாப்புராவில் நடந்திருப்பதால், ரெயில்வே போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story