கேரள கவர்னர் அரசியலமைப்பிற்கு முரணான செயல்களை செய்கிறார்: எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் குற்றச்சாட்டு


கேரள கவர்னர் அரசியலமைப்பிற்கு முரணான செயல்களை செய்கிறார்: எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் குற்றச்சாட்டு
x

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு தான் பேட்டியளிக்க மாட்டேன், அவர்களை உடனடியாக வெளியேற சொன்னார்.

திருவனந்தபுரம்,

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கொச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு தான் பேட்டியளிக்க மாட்டேன் என்றார். அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற சொன்னார். கேரள கவர்னரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஊடகங்களுக்கு தடை விதித்த கேரள கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்(காங்கிரஸ்) வி.டி.சதீசன் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜ்பவனுக்கு கேரளப் பத்திரிக்கையாளர்கள் சங்கம் நடத்திய பேரணியைத் துவக்கி வைத்து வி.டி.சதீசன் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், "சில ஊடகங்களை மட்டும் வெளியேற்றிய கவர்னரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது. ஊடகத் தடை என்பது ஜனநாயக இந்தியாவுக்கே அவமானம். மக்களுக்கு தகவல் தெரிவிப்பதில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் முக்கியமானது. ஊடக சுதந்திரம் மறுக்கப்படும் இடத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.

கேரள கவர்னர் அரசியல் சட்டத்திற்கு முரணான செயல்களைச் செய்கிது, பிரபலமாக இருக்கவும் செய்திகளை உருவாக்கவும் முயற்சிக்கிறார். ஊடகங்களுக்கு தடை விதித்த கேரள கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஊடகவியலாளர்கள் செயலகத்துத்க்குள் செல்ல அனுமதி இல்லை. இழந்த உரிமைகளை மீட்டெடுக்க பத்திரிகையாளர்கள் சங்கம் போராட்டம் நடத்த வேண்டும்.அடையாள அட்டை வைத்திருக்கும் ஊடகவியலாளர்கள் உள்ளே நுழைந்தால் செயலகம் இடிந்துவிடுமா? ஊடகவியலாளர்களுக்கு செயலகத்துக்குள் நுழையும் உரிமை மறுக்கப்படக்கூடாது" என எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறினார்.


Next Story