மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளை; உறவினர் கைது


மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளை; உறவினர் கைது
x

பெல்தங்கடி அருகே மூதாட்டியை கொன்று வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு;

மூதாட்டி

தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா பெலாலு கிராமத்தின் அருகே உள்ள கெரேகொடியை சோ்ந்தவர் அக்கு கவுடா(வயது 85). இவர், தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அக்குகவுடாவின் மகன் மற்றும் மருமகள் வேலைக்கு சென்றுவிட்டனர்.

இவர்களின் மகளும் பள்ளிக்கு சென்றிருந்தாள். இதனால் வீட்டில் அக்கு கவுடா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது இவரது வீட்டிற்கு கதிருத்யவரா கிராமத்தை சேர்ந்த மருமகளின் உறவினரான அசோக்(வயது 32) என்பவர் வந்துள்ளார். அவர், அக்குகவுடாவிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்.

இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அவர், நகை-பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அப்போது அவர், அக்குகவுடாவிடம் தண்ணீர் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

அதன்படி தண்ணீர் கொண்டுவர அக்கு கவுடா சென்றபோது, அசோக் வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை திருட முயன்றுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அக்கு கவுடா, அவரை தடுத்து கண்டித்துள்ளார்.

கொலை-கொள்ளை

இதனால் ஆத்திரமடைந்த அவர், அக்கு கவுடாவை அங்கிருந்த ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்து உடலை, வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவம் அருேக வீசியுள்ளார்.

பின்னர் அசோகா, பீரோவில் இருந்த தங்கநகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பேத்தி, பாட்டியை அழைத்துள்ளார். ஆனால் அக்கு கவுடா வீட்டில் இல்லை.

இதையடுத்து அந்த சிறுமி வீட்டின் பின்புறம் இருந்த மாட்டு தொழுவத்திற்கு சென்று பார்த்தார். அப்ேபாது மூதாட்டி அக்கு கவுடா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி கதறி அழுதார்.

உடனடியாக அந்த சிறுமி, தனது பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். இந்த தகவலில் அறிந்த சிறுமின் பெற்றோர் உடனே வீட்டிற்கு வந்து பார்த்தனர்.

அப்போது அவர்கள், அக்கு கவுடா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததையும், பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் மூதாட்டியின் காதில் அணிந்திருந்த காதணி ஆகியவை திருடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கைது

இதுகுறித்து தா்மஸ்தலா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் படுகொலை செய்யப்பட்ட அக்குகவுடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அக்கு கவுடாவை, உறவினர் அசோக் கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தர்மஸ்தலா போலீசார், அசோக்கை கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை, கொள்ளை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story