விவசாயியை கொன்று உடல் மலைப்பகுதியில் வீச்சு; வாலிபர் கைது


விவசாயியை கொன்று உடல் மலைப்பகுதியில் வீச்சு; வாலிபர் கைது
x

சித்ரதுர்கா அருகே விவசாயியை கொன்று உடலை மலைப்பகுதியில் வீச்சிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு;

சித்ரதுர்கா தாலுகா கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமி(வயது 25). விவசாயியான இவர் பங்காரதஹள்ளி மலைப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சித்ரதுர்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.


பின்னர் கொலையான சுவாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் முதலில் சுவாமியை கொன்ற மர்மநபர்கள் யார், எதற்காக கொன்றனர் என்பது தெரியவில்லை. இதற்கிடையே சுவாமியின் பெற்றோர், போலீசில் தனது மகனின் கொலையில் அதேப்பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் மீது சந்தேகமாக இருப்பதாகவும், அவரை பிடித்து விசாரணை நடத்தும்படி புகார் அளித்தனர்.


அதன்பேரில் போலீசார், மஞ்சுநாத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், போலீசில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது சுவாமி, மஞ்சுநாத்தின் உறவுக்கார பெண்ணை கேலி-கிண்டல் செய்து வந்துள்ளார்.


இதையறிந்த மஞ்சுநாத், சுவாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த முன்விரோதத்தில் சுவாமியை, மஞ்சுநாத் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொன்று உடலை மலைப்பகுதியில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். கைதான மஞ்சுநாத் மீது போலீசார் கொைல வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story