லடாக்: உலகின் உயரம் வாய்ந்த உப்புநீர் ஏரியில் மாரத்தான் போட்டி நடத்தி கின்னஸ் உலக சாதனை

சர்ச்சைக்கு உரிய லடாக்கின் பாங்காங் சோ ஏரியில் அரை மாரத்தான் போட்டி நடத்தி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
லடாக்,
உலகின் மிக உயர்ந்த பகுதியில் அமைந்த உப்புநீர் ஏரி என்ற பெருமையை பெற்றது பாங்காங் சோ ஏரி. லடாக்கில் அமைந்த இதன் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள இரண்டு பகுதி சீனா வசமுள்ளது.
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே கிழக்கு லடாக் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எல்லை பகுதியில் மோதல் ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.
இதன்பின்னர், தளபதிகள் மட்டத்திலான உயரதிகாரிகள் கலந்து கொண்டு பல சுற்றுகள் கொண்ட பேச்சுவார்த்தை நடத்தி பின்னர், இரு தரப்பிலும் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டன. எனினும், சர்ச்சைக்குரிய பாங்காங் சோ ஏரி அமைந்த பகுதி, உள்ளிட்ட சீன எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்தியா, சீனா எல்லையையொட்டி 700 கி.மீ. வரை பரவியுள்ள இந்த ஏரி தற்போது குளிர்கால சூழலில் உறைந்து காணப்படுகிறது. 13 ஆயிரத்து 862 அடி உயரத்தில் அமைந்து, உறைந்து பனிக்கட்டியாக உள்ள இந்த ஏரியில் முதன்முறையாக அரை மாரத்தான் போட்டி நடத்த முடிவானது.
இதன்படி, 21 கி.மீ. தொலைவுக்கான அரை மாரத்தான் போட்டி கடந்த 20-ந்தேதி நடைபெற்றது. மொத்தம் 75 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியானது லுகுங் என்ற பகுதியில் தொடங்கி மான் கிராமத்தில் முடிந்தது. 4 மணிநேரம் நடந்த இந்த போட்டி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.
சீன எல்லையையொட்டிய சர்ச்சைக்கு உரிய லடாக்கில், உலகின் மிக உயர்ந்த இடத்தில் அமைந்த உறைந்த நிலையிலான, பாங்காங் சோ ஏரியில் முதன்முறையாக, அரை மாரத்தான் போட்டி நடத்தியதற்காக இந்த கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது.






