சிக்கமகளூருவில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது


சிக்கமகளூருவில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2023 6:45 PM GMT (Updated: 31 Aug 2023 6:46 PM GMT)

சிக்கமகளூருவில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் தாலுகா இந்தாவாரா கிராமத்தை சேர்ந்தவர் ஒன்னேஷ். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய நினைத்தாா். அதற்காக ஒன்னேஷ், சிக்கமகளூரு தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று நில அளவையர் ரமேஷப்பாவிடம் விண்ணப்பம் செய்தார். ஆனால் அவர் நிலத்தை அளவீடு செய்ய தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறினார்.

அப்போது ஒன்னேஷ் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என கூறினார். ஆனால் ரமேஷப்பா பணம் தந்தால் வேலையை முடித்து தருவதாக கூறினார். இதையடுத்து ஒன்னேஷ் பணம் கொடுக்க சம்மதித்தார். மேலும் முன்பணமாக ரூ.3 ஆயிரம் தருவதாக கூறி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். பின்னர் ஒன்னேஷ் பணம் கொடுக்க விரும்பாமல் இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் லோக் அயுக்தா போலீசார் ஒன்னேசிடம் சில அறிவுரைகளை வழங்கி ரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். ஒன்னேஷ் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று ரமேஷப்பாவிடம் ரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்தை கொடுத்தார்.

அதனை ரமேஷப்பா வாங்கியபோது அங்கு பதுங்கி இருந்த லோக் அயுக்தா போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story