அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது...!


அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது...!
x

நிலச்சரிவு காரணமாக நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பயணம் ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று பகவதி நகர் அடிப்படை முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அமர்நாத் பயணிகளின் பாதுகாப்பு கருதி யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, இன்று காலை முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. இதில் 999 பேர் கொண்ட 37வது குழு இன்று அதிகாலை பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அதில் 422 பேர் பால்டால் வழியாகவும், 577 பேர் பஹல்காம் வழியாகவும் சென்றனர்.

அமர்நாத் யாத்திரை தொடங்கி இதுவரை 4.28 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 62 நாள்கள் நிகழும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 31-ல் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story