ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் : 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றம்


ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் : 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றம்
x

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க கோரிய வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்தது, விசாரணை ஏப்ரல் 18 முதல் தொடங்கும்.

புதுடெல்லி

உலகம் முழுவதும் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால் மற்றவர்களைப் போன்று அவர்களும் மனிதர்கள்தான் என்பதை இந்த சமூக அமைப்பு கண்டுகொள்ளாமல் அவர்களை ஒதுக்கிவைக்கவே நினைக்கிறது.

இருப்பினும் தங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து இவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகவும் தற்போது பல குரல்கள் சேர்ந்துள்ளது. இதன் காரணமாகத்தான் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா ஆகிய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என இவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு குறித்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதிலளித்துள்ளது. அதில், ஓரின சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வது இந்தியக் குடும்பக் கொள்கையுடன் ஒப்பிடத்தக்கது அல்ல.

கணவன் ஆணாகவும், மனைவி பெண்ணாகவும் இருந்து இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை ஆகியோரை கொண்டதே குடும்ப அமைப்பாகக் கருத முடியும் என பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், ஒரே பாலின திருமணத்திற்கு நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்படுவதற்கு மனுதாரர்கள் அடிப்படை உரிமை கோர முடியாது என்று மத்திய குறிப்பிட்டுள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதை தொடர்ந்து ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட் மாற்றி உள்ளது.இந்த மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கும்.


Next Story