சகோதரனின் பேச்சை கேட்டு காதலை கைவிட்ட இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; காதலன் கைது


சகோதரனின் பேச்சை கேட்டு காதலை கைவிட்ட இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; காதலன் கைது
x
தினத்தந்தி 9 Oct 2022 7:00 PM GMT (Updated: 9 Oct 2022 7:00 PM GMT)

சகோதரனின் பேச்சைக் கேட்டு காதலை கைவிட்ட இளம்பெண்ணை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் உன்கல் அருகே நடந்துள்ளது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உப்பள்ளி;


காதலர்கள்

தார்வாா் மாவட்டம் உப்பள்ளி தாலுகா உன்கல் பாதாமிஓனி பகுதியை சேர்ந்தவர் தியாமண்ணா(வயது 28). இவரது தங்கை தாயவ்வா(24). அதே பகுதியை சேர்ந்தவர் அனுமந்தா(26). இதில் அனுமந்தாவுக்கும், தாயவ்வாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து அவர்கள் இருவரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்துள்ளனர். மேலும் இருவரும் வெளியே சுற்றி காதலை வளர்த்து வந்துள்ளனர். இதுகுறித்து தாயவ்வாவின் அண்ணன் தியாமண்ணாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் தியாமண்ணா, தனது தங்ைகயை கண்டித்துள்ளார்.

கத்திக்குத்து

இதனால் தாயவ்வா, தனது காதலன் அனுமந்தாவிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதில் அனுமந்தா, தாயவ்வாவின் செல்போன் எண்ணிற்கு பலமுறை அழைத்தும் அவர் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனுமந்தா நேற்றுமுன்தினம் தியாமண்ணாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த தியாமண்ணா மற்றும் அவரது தங்கை தாயவ்வாவிடம் தகராறு செய்துள்ளார்.

இதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அனுமந்தா, தான் மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து தியாமண்ணாவையும், தாயவ்வாவையும் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதில் அவர்கள் இருவரும் கத்திக்குத்து காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தனர்.

கைது

அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கத்திகுத்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வித்யா நகர் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரித்தனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த அனுமந்தாவை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story