லோன் செயலிகளுக்கு சீனாவுடன் தொடர்பு - அதிர்ச்சி கொடுத்த சைபர் கிரைம்


லோன் செயலிகளுக்கு சீனாவுடன் தொடர்பு - அதிர்ச்சி கொடுத்த சைபர் கிரைம்
x

உடனடியாக லோன் தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பலுக்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதாக டெல்லி சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

உடனடியாக லோன் தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பலுக்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதாகவும் கிரிப்டோகரன்சி மூலம் சீனாவுக்கு பணம் அளிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் டெல்லி சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மொபைல் செயலிகள் உடனடியாக லோன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபடுவதாவும் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் டெல்லி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் மோசடி செயலிகள் குறித்து உளவுத்துறை ஆய்வில் டெல்லி சிறப்புப்படை போலீசார் ஈடுபட்டனர்.

அதில் இந்தியாவில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட லோன் செயலிகள் சீனா மற்றும் ஹாங்காங் சர்வர்களுடன் தொடர்புடையது என்றும் முக்கியமாக அலிபாபா நிறுவனத்தின் சர்வர் மூலம் இயங்குவதாக டெல்லி டிசிபி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களாக டெல்லி, அரியானா, கர்நாடகா, மராட்டியம் மற்றும் பீகார் மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 22 பேரை கைது செய்துள்ளதாகவும் அதில் 6 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் மொபைல் செயலி மூலம் லோன் வழங்குவதாக கூறி பயனாளர்களை கட்டாயப்படுத்துவதுடன் அவர்களின் தகவல்களை சேகரித்து மிரட்டல் விடுப்பதாகவும் மோசடி மூலம் பெறும் பணம், ஹவாலா மற்றும் கிரிப்டோ கரன்சி மூலம் சீனாவுக்கு மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பலின் லோன் செயலிகளையும் டெல்லி போலீசார் பட்டியலிட்டுள்ளனர்.


Next Story