டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல்


டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 7 Aug 2023 10:18 AM GMT (Updated: 7 Aug 2023 10:28 AM GMT)

டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் மக்களவையிலும் எதிரொலித்தது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி மக்களவை தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இந்த அமளிகளுக்கு இடையே சில மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை மக்களவை வழக்கம் போல் கூடியது. மக்களவை தொடங்கியதில் இருந்தே மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதேபோல் மாநிலங்களவையும் அமளி காரணமாக பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மக்களவை மீண்டும் கூடியது. தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story