ஒடிசா ரெயில் விபத்து மீட்பு பணியின்போது கண்டெடுக்கப்பட்ட காதல் கடிதங்கள்..!


ஒடிசா ரெயில் விபத்து மீட்பு பணியின்போது கண்டெடுக்கப்பட்ட காதல் கடிதங்கள்..!
x

ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நடந்த ரெயில்கள் விபத்து மக்கள் மனதில் நீங்காத சோக சுவடுகளாக என்றும் சுமந்து கொண்டிருக்கும். விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த பொருட்கள் ஒவ்வொன்றும் பல இதயங்களின் வலியையும், ஏக்கத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

அந்த வகையில், மீட்பு பணியின்போது தண்டவாளத்தின் சில அடி தூரத்துக்குள் ஒரு பயணியின் பை கிடைத்தது. அதில் ஒரு நோட் புக் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது மீட்பு குழுவினர் கண்களில் வேதனை கலந்த கண்ணீர் கசிந்தது. ஏனெனில் அந்த நோட்டு புத்தகத்தில் இடம்பெற்று இருந்தது அனைத்தும் காதல் கவிதைகள்.

சிவப்பு, நீலம், பச்சை என்று பல வண்ணங்களை கவிதையாக வடித்து இருந்தார். வங்காள மொழியில் எழுதப்பட்டிருந்த கவிதைகள் ஒவ்வொன்றும் காதலையும், காதலின் ஏக்கத்தையும் வெளிப்படுத்தியது. 'சிறிய மேகங்கள் மழையை உருவாக்குகின்றன. சிறிய கதைகள் அன்பை உருவாக்குகின்றன' என்று அந்த கடிதங்கள் நீள்கிறது. எழுதியவர் யார்? அவர் என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. அவரது காதலின் அடையாளமான கடிதங்கள் மட்டும் எஞ்சி நிற்கிறது.

மேலும் குழந்தைகளுக்காக ஆசையாக வாங்கி வைத்திருந்த பொம்மைகள், உடைகள் சிதறி கிடந்தன. கிழிந்தும், சிதைந்தும் கிடந்த அவற்றின் மீது ரத்த கறைகள் படிந்து காணப்பட்டன. சிதறி கிடந்த பயணிகளின் உடமைகளை தன்னார்வலர்கள் சேகரித்து ஆங்காங்கே குவித்து வைத்துள்ளார்கள். இதனை மிகுந்த சோகத்தில் மக்கள் பார்த்து செல்கின்றனர்.


Next Story