காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம்; மண்டபத்தில் தீ குளித்த காதலன் உயிரிழப்பு


காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம்; மண்டபத்தில் தீ குளித்த காதலன் உயிரிழப்பு
x

காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமண மண்டபத்திற்கு வந்த காதலன் தீ குளித்தார்.

ஐதராபாத்,

காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெறுவதால் அதிர்ச்சியடைந்த காதலன் திருமண மண்டபத்திற்கு சென்று தீ குளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் தரப்பில் நேற்று கூறியதாவது, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது இளைஞன் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கும் வெறொரு நபருக்கும் கடந்த 30-ம் தேதி திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த காதலன் தனது காதலிக்கு திருமணம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார். பின்னர், காதலி முன் தான் கொண்டுவந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி அந்த இளைஞர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.

கல்யாண மண்டபத்தில் இளைஞர் தீக்குளித்ததை கண்ட மணமகள் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு இளைஞனின் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். தீக்குளித்ததில் படுகாயமடைந்த இளைஞனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீக்குளித்து உயிரிழந்த காதலன் மற்றும் வெறொரு நபரை திருமணம் செய்துகொண்ட அவரின் காதலியின் பெயர் விவகரங்களை போலீசார் வெளியிடவில்லை.


Next Story