மராட்டிய அரசு பெரும்பான்மை இழந்து விட்டது; ஏக்னாத் ஷிண்டே


மராட்டிய அரசு பெரும்பான்மை இழந்து விட்டது;  ஏக்னாத் ஷிண்டே
x

சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி பெரும்பான்மை இழந்து விட்டதாக ஏக்னாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மும்பை,

சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். இந்தநிலையில் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு துணை சபாநாயகர் 16 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். மேலும் இன்றுக்குள் (திங்கட்கிழமை) நோட்டீசுக்கு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். மேலும் அவர் சிவசேனா சட்டமன்றகுழு தலைவராக அஜய் சவுத்ரி நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், மராட்டிய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஏக்னாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் ஏக்னாத் ஷிண்டே தாக்கல் செய்த மனுவில், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சியை சேர்ந்த 38 எம்.எல்.ஏக்கள் ஆதரவை திரும்ப்பெற்று இருப்பதால், சட்டசபையில் மகா விகாஸ் அகாடி கூட்டணி பெரும்பான்மையை இழந்து இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story