ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன குழந்தைகள் பவுடரின் உற்பத்தி உரிமம் ரத்து: மராட்டிய அரசு நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!


ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன குழந்தைகள் பவுடரின் உற்பத்தி உரிமம் ரத்து: மராட்டிய அரசு நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
x

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன குழந்தைகள் பவுடரின் உற்பத்தி உரிமத்தை மராட்டிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

மும்பை,

மும்பையின் முலுண்டில் உள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஜான்சன் பேபி பவுடரின் உற்பத்தி உரிமத்தை மராட்டிய அரசு ரத்து செய்துள்ளது.

பிரபல குழந்தைகள் டால்கம் பவுடர் நிறுவனமான ஜான்சன் பேபி பவுடரின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்து மராட்டிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. புனே மற்றும் நாசிக்கில் எடுக்கப்பட்ட ஜான்சன் பேபி பவுடரின் மாதிரிகள் தரமானதாக இல்லை என அரசால் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பேபி பவுடர் தயாரிப்பாளரான ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பவுடர் தயாரிப்பதை 2023 முதல் நிறுத்துவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியது. இந்நிறுவனம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் கனடாவில் டால்கம் பவுடர் தயாரிப்பை நிறுத்திவிட்டது.

கடந்த சில வருடங்களாக இந்நிறுவனத்தின் பேபி பவுடரை பயன்படுத்துவதால் புற்றுநோய் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அந்நிறுவனம் நீண்ட சட்டப் போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனையும் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது.

இந்த நிலையில், பவுடரின் மாதிரிகள் தரமானதாக இல்லை என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையை இந்நிறுவனம் ஏற்கவில்லை. இதை எதிர்த்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.


Next Story