மகிஷா தசரா விழா நடத்த அனுமதிக்க கூடாது


மகிஷா தசரா விழா நடத்த அனுமதிக்க கூடாது
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:45 PM GMT)

மைசூரு சாமுண்டி மலையில் மகிஷா தசரா நடத்த அனுமதி வழங்க கூடாது என பிரதாப் சிம்ஹா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

மைசூரு

மைசூரு தசரா விழா

மைசூருவில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பிரதாப் சிம்ஹா எம்.பி. பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சாமுண்டி மலையில் மகிஷா தசரா விழா வருகிற 13-ந் தேதி நடக்கிறது.

இதற்கு மாநில அரசு அனுமதி வழங்க கூடாது. கடந்த 9 ஆண்டுகளாக மகிஷா தசரா விழா நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் சாமுண்டி மலையில் உள்ள மகிஷாசூரன் சிலை முன்பு வைத்து மகிஷா தசரா விழா நடைபெற்றது.

பின்னர் சாமுண்டி மலையில் மகிஷா தசரா விழா நடத்த அப்போதைய அரசு அனுமதி வழங்கவில்லை. தற்போது காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருப்பதால் மகிஷா தசராவை சாமுண்டி மலையில் கொண்டாடப்படும் என ஒரு சில அமைப்புகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்தநிலையில், இந்த ஆண்டு ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை இல்லாத சில தலித் மக்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், வருகிற 13-ந் தேதி சாமுண்டி மலையில் வைத்து மகிஷா தசரா விழா நடத்த முடிவு செய்துள்ளனர்.

அனுமதி வழங்க கூடாது

இதனால், சாமுண்டீஸ்வரி அம்மனின் பக்தர்களுக்கு மனவேதனை தருகிறது. இந்த செயல் சாமுண்டீஸ்வரி அம்மனை அவமதிக்கும் செயலாகும். எனவே சாமுண்டி மலையில் மகிஷா தசரா விழா நடத்த மாநில அரசு அனுமதி வழங்க கூடாது.

அப்படி வழங்கினால் மகிஷா தசரா விழா நடக்கும் அன்று (13-ந்தேதி) இந்து அமைப்பினர் சாமுண்டி மலைக்கு நடைப்பயணம் மேற்கொள்வோம்.

அங்கு காலை முதல் மாலை வரை ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பா.ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது மகிஷா தசரா விழாவை சாமுண்டி மலையில் நடத்த யாரும் முன்வரவில்லை. தற்போது அங்கு மகிஷா தசரா விழாவை நடத்த காரணம் காங்கிரஸ் அரசு தான்.

இந்த விழாவை சாமுண்டி மலையில் நடத்தாமல் வேறு எங்கயாவது நடத்தட்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story